Friday, July 10, 2015

Laws of Love - Mahatma Gandhi

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=150

 
அன்பின் விதிகள்
-- மகாத்மா காந்தி


பேரழிவுகளுக்கு மத்தியிலும் வாழ்வு தொடர்வதை நான் கண்டிருக்கிறேன் . எனவே அழிவை காட்டிலும் மேலான ஒரு விதி இருக்க வேண்டும். அத்தகைய சட்ட ஒழுங்கின் கீழ் மட்டுமே ஒரு சமுகம் புரிதலுடையதாகவும், வாழ்கை, வாழ தகுதி மிக்கதாகவும் ஆகிறது. அது வாழ்வின் விதியாகவும் இருக்குமானால் நாம் அதை நம் அன்றாட நிகழ்வுகளில் கடைபிடிப்பது அவசியமாகிறது.

எங்கெல்லாம் போர் இருக்கிறதோ , எங்கெல்லாம் எதிராளிகள் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் அன்பால் வென்றிடலாம். எனது சொந்த வாழ்வில், பல சமயங்களில், அழிவின் கட்டளைகள் அளிக்க முடியாத விடைகளை அன்பின் கட்டளைகள் தர கண்டிருக்கிறேன்.

அஹிம்சா மனநிலையை அடைய சீரிய மற்றும் சிரமமான பயிற்சி தேவைப்படுகிறது. அத்தகைய வாழ்வு ஒரு சிப்பாயின் வாழ்வை போன்ற இயக்க ஒழுங்கை உடையது. நம் மனம், உடல், சொல் செயல் இவை ஒத்து இயங்கும் போது மட்டுமே சரியான துல்லிய நிலையை அடையமுடிகிறது.

சத்தியம் மற்றும் அஹிம்சையை நாம் நம் வாழ்வின் கட்டளைகளாக பின்பற்ற உறுதி பூனுவோமேயானால், நம் முன் வரும் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு பிறக்கும். இயற்கையின் விதிகளை பின்பற்றும் விஞ்ஞானி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துவது போல, அன்பின் விதிகளை விஞ்ஞான துல்லியத்தோடு கடைபிடிக்கும் ஒவ்வொரு மனிதனும் அதிக அற்புதங்களை நிகழ்த்துகிறான். இயற்கையின் விசைகளான மின்சக்தி போன்றவற்றை விட அஹிம்சை மிக நுட்பமானதும் அற்புதமானதும் ஆகும். அன்பின் விதிகள் நாமறிந்த நூதன விஞ்ஞானத்தை காட்டிலும் வல்லமை பொருந்திய விஞ்ஞானம் ஆகும்.

கரு: உங்கள் வாழ்வின் அன்பின் விதிகள் என்ன?

Friday, July 3, 2015

Be A Light Unto Yourself- - J. Krishnamurti

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=183


நமக்கு நாம் ஒளி விளக்காக இருத்தல்
- .J. கிருஷ்ணமூர்த்தி

விழிப்புணர்வுடன் இருப்பது என்பதன் அர்த்தம் நாம் நடப்பது, நாம் அமர்வது, நம் வார்த்தைகள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் மனதில் தோன்றும் எதிர் செயல்கள் இவை அனைத்தையும் நாம் கவனித்து நோக்குதல் ஆகும்.

இந்த விழிப்புணர்வு என்பது தன்னுணர்வு இல்லாத மனம் மற்றும் அறிவு சார்ந்த மனம், அந்த மனதில் தேங்கி இருக்கும் துயரங்கள், மனித இனத்தின் மொத்த துயரங்கள் இவை அனைத்தயும் உள்ளடக்கியது. ஒவ்வொன்றையும் நல்லது, கெட்டது என்று நாம் மதிப்பீடு செய்வோமானால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.

விழிப்புணர்விலிருந்து சிரத்தையும் கவனமும் பிறக்கின்றன. நம்முடைய விருப்பு வெறுப்புகளும், தேர்வும், இல்லாத விழிப்புணர்வில் வெறும் கவனித்தல் மட்டுமே இருக்கிறது. இதற்கு மனதளவில் நிறைய இடம் தேவைப் படுகிறது, நம் மனதில் ஆசைகளும், அபிலாஷைகளும், துயரமும், வலியும் நிரம்பி இருக்கும் பொழுது உற்று நோக்குவதற்கோ, கவனிப்பதற்கோ தேவையான இடம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் மனம் தன்னுடைய செயல்கள் மற்றும் எதிர் செயல்களிலே மாட்டிக் கொண்டும், சுழன்றுக் கொண்டும் இருக்கிறது. நம் மனதின் ஒவ்வோரு மூலையையும் நம்மால் ஆராய முடிய வேண்டும். ஒரு சிறிய இடத்தில் கூட இருட்டை ஆராய நாம் பயப்பட்டோம் என்றால் அதில் இருந்து மாயையும் மருட்சியும் பிறக்கும்.

ஆழ்ந்த கவனம் இருக்கும் நிலையில் மட்டும்தான் நாம் நமக்கே விளக்காக இருக்க முடியும். தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலும் அந்த ஒளியிலிருந்து வரும் பொழுது - அது சமையல் செய்வதாக இருந்தாலும்,  பணியை செய்வதாக இருந்தாலும், அது தியானமாக இருக்கும்.

Saturday, June 13, 2015

Not Minding What Happens - Eckhart Tolle

Oriignal Reading
http://www.awakin.org/read/view.php?tid=2089

நடப்பதை எதிர்க்காதது
- எக்ஹார்ட் டொல்லே

இந்தியாவின் புகழ் பெற்ற தத்துவ ஞானி J.கிருஷ்ணமூர்த்தி சுமார் 50 வருடங்களுக்கு உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயங்களைப் பற்றி விவரிக்க முயற்சி செய்தார்,. தன் வாழ்க்கையின் பிற்பகுதியில். ஒரு சொற்பொழிவின்போது, அங்கிருந்த மக்கள் ஆச்சரியப் படும் விதத்தில் தன் வாழ்வின் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னார். அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். கூட்டத்தில் இருந்த பலர் 20, 30 வருடங்களாக அவர் சொற்பொழிவுகளை கேட்டு  வந்து இருந்தாலும் அதன் சாரத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள். கடைசியாக தங்கள் ஆசான் புதிருக்கான விடையை கொடுக்கப் போகிறார் என்று நிமிர்ந்து அமர்ந்தனர்.

"என்ன நடக்கிறதோ அதை நான் எதிர்ப்பதில்லை" என்று அவர் ரகசியத்தை சொல்லி முடித்தார். அவர் அதை விளக்கவில்லை. ஆனால் இந்த சிறிய வாக்கியத்தின் உள்ளர்த்தம் மிக ஆழமானது.

நடப்பதை எதிர்க்காத போது நான் அதனுடன் ஒருமைப்பாட்டில் இருக்கிறேன். இங்கு "நடப்பது" எபன்பது அந்த தருணத்தின் தன்மையை, உருவத்தை, பண்பைக் குறிக்கும். 'எதிர்க்காதது' என்பது அதை நல்லது என்றோ, தீயது என்றோ வகைப்படுத்தாமல், அதை அவ்வாறே ஒத்துக் கொள்ளுதல் ஆகும்.

அப்படி என்றால் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர நாம் முயற்சிகள் எடுக்க வேண்டாம் என்று அர்த்தம் கிடையாது. கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.
அந்த முயற்சியின் அடிப்படை, நிகழ் தருணத்துடன் ஒருமைப்பாடு என்பதாக இருக்கும்போது, அந்த செயல், உயிரின் அறிவாற்றலிடமிருந்தே நேரடியாக, சக்தியைப் பெறுகிறது.

Friday, May 1, 2015

Creativity of Silence- Dada


Oriignal Reading
http://www.awakin.org/read/view.php?tid=363


அமைதியின் படைப்பாற்றல்.
- தாதா

வாழ்வின் ஒரு புதிய அழகை நாம் அமைதியில் காணலாம். இந்த அழகைக் கண்டபின் மனதின் சலனங்கள் நிரம்பிய ஆசைகளின் மீது நம் ஈடுபாடு குறையத் துவங்கும். அப்போது நம்மை நம் படைப்பாற்றலில் இருந்து விலக்கி வைக்கும். ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த கனவுகளின் எல்லைக் கோடுகளை நாம் காணலாம். எதிர்பார்ப்பு என்பது, எதிர்காலத்தில் எண்ணத்தை பின்தொடர்வது; இந்த தருணத்தின் அனுபவத்திற்குத் தடையாக நிற்பது.

வெளி உலகில் நாம் வேலை, செயல் இவற்றை செய்தாக வேண்டும். ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் நம்மை எந்நேரமும், இந்த வெளி விளையாட்டிலேயே ஆழ்த்தி விடுகின்றன, இவ்வாறு ஆழ்ந்த மனம், இந்த நிலை மாறாமல், தன் உயிர் சக்தியை, புற உலகின் சாதாரணமான, இயந்திரத்தனமான, நாட்டங்களில் செலவழித்து விடுகிறது. இது வாழ்க்கையை பிரிவுகளாக பிரித்து, சமநிலையை பாதித்து, நம்மை நாம் அறியும் முயற்சிக்கு தடையாக இருக்கிறது.

கலையாற்றல் மிக்க நிலை என்பது வாழ்க்கையை தன்னந்தனியாக வாழ்வதால் வருவது அல்ல..அது வாழ்வின் முழுமையில் இருந்து வருவது. உடல் மனம் ஆன்மா மற்றும் உணர்வுகள் இதில் ஐக்கியமாகி உள்ளன. இந்த நிலையில் புரிதலுக்கும், செயலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. அறிவாற்றலுக்கும், படைப்பற்றலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. நிகழ் தருணத்தில் வாழ்வின் அசைவு தன்னிச்சையாக வெளிப்படுகறது.  இப்படிப் பட்டவருக்கு ஓவியம் தீட்டுவதில் உள்ள திருப்தி, சமயல் செய்வதிலும் கிடைக்கிறது. இந்த நிலையில் செயல் படுவோர் கலைஞர்கள் எனப்படுகிறார்கள். ஒருவர் எந்தத் துறையில் பணி செய்தாலும், அதன் வெளிப்பாடு எந்த விதத்தில் இருந்தாலும், அந்த உயிர் சக்தியின் தரம் அவரை ஒரு கலைஞராக்குகிறது.

கலை என்பது வெறும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் வரும் திறனோ, திறமையோ அல்ல. நம்முள்  இருக்கும் ஆத்ம அறிவின் வெளிப்பாடே கலை. இதை காண்பதற்கு முழுமையான கவனமும், அமைதியும் தேவை. ஏனெனில், நம் ஆத்ம சக்தியின் அமைதியில்தான் படைப்பாற்றல் பிறக்கிறது.

கேள்வி: உங்கள் படைப்பாற்றல் எந்த சூழ்நிலையில் தடையில்லாமல் மலர்கிறது?

Saturday, April 25, 2015

Living at the Right Speed - Carol Honore

original reading
http://www.awakin.org/read/view.php?tid=494

சரியான வேகத்தில் வாழ்தல்
- கரோல் ஆனர்

வேகம் மற்றும் நிதானம் என்பவை நம் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் குறியீடுகள்.

வேகம் என்பது பொதுவாக பரபரப்பானது, ஆளுமை செய்வது, அவசரப்படுவது, முரட்டுத்தனமானது, அலசி ஆராய்வது, மேலோட்டமானது, சுறுசுறுப்பானது, பொறுமை இல்லாதது,  எண்ணிக்கை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

இதற்கு எதிர்மறையாக, நிதானம் என்பது, அமைதி, ஜாக்கிரதை, கவனிப்பு, சலனமற்ற, உள்ளுணர்வு சார்ந்த, அவசரமில்லா, பொறுமையான, ஆழ்ந்து சிந்திக்கும், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையாக கருதப் படுகிறது. மக்கள், கலாசாரம், பணி, உணவு - எல்லாவற்றோடும் நிஜமான, ஆழ்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நிதானம் தேவைப் படுகிறது.

நிதானம் என்றால் சுறுசுறுப்பில்லாத ஒரு நிலை என்று அர்த்தம் இல்லை. நிதானமாக ஒரு பணியை செய்யும்போது அதன் பலன் விரைவில் கிடைப்பதை நாம் பல விஷயங்களில் காண்கிறோம், நிதானமான மன நிலையுடன் நம்மால் துரிதமாக காரியங்களை செய்யவும் முடியும்.

நமக்கு வெளியே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும், உள் நிதானத்துடன் எவ்வாறு நடந்து  கொள்வது என்று சில நூறாண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நிதான இயக்கம் என்று பெயர் கொடுக்கப் பட்டு உள்ளத

நத்தையின் வேகத்தில் எல்லாற்றையும் செய்ய வேண்டும் என்பது நிதான இயக்க்கத்தின் மையக் கருத்து அல்ல. இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்கள் உங்களயும், என்னையும் போன்ற மக்கள். இந்த வேகமான், நவீன சூழ்நிலையிலும், தரமான வாழ்க்கையை விரும்புவர்கள்.

நிதான இயக்கத்த ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் சமநிலை  என்று சொல்லலாம். எப்போது வேகமாக ஒரு செயல்பாடு தேவைப்படுகிறதோ, அப்போது வேகமாவே செயல்பட வேண்டும். எப்போது நிதானம் தேவைப்படுகிறதோ, அப்போது நிதானத்துடன் செயல் பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு கணத்திலும், வாழ்வின் லயத்திற்கு ஏற்ற சரியான தாளத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். 

கேள்வி: நீங்கள் சூழலுக்கு ஏற்ப வேகத்தை மாற்றிய ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, April 17, 2015

Self Knowledge - Gibran

Original Reading
http://www.awakin.org/read/view.php?tid=310

Self Knowledge
சுய அறிவு
- கலீல் கிப்ரான்


சுய அறிவைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கான பதில் இப்படி வந்தது.

ஆழ்ந்த அமைதியில் இருக்கும் உங்கள் இதயத்திற்கு பகலிரவின் ரகசியங்கள் தெரியும். ஆனால் அந்த உண்மையின் குரலைக் கேட்பதற்கு உங்கள் காதுகள் ஏங்குகின்றன.

எண்ணங்களால் எப்போதும் தெரிந்ததை நீங்கள் வார்த்தைகளாலும் அறிவீர்கள். உங்கள் கனவின் மெய்யை உங்கள் விரல்கள் தீண்ட முடியும். தீண்டவும் வேண்டும்.

மறைந்திருக்கும் உங்கள் ஆத்மாவின் நீரூற்று, எழும்பி கடலினை நோக்கிப் பாய வேண்டும். அப்போது உங்களுடைய ஆழத்தின் புதையல்கள் திறந்து காண்பிக்கப் படும். ஆனால் இவற்றை எடை போட தராசு ஒன்று தயார் செய்ய வேண்டாம்.

அறிவி்ன் ஆழத்தை கோல் கொண்டும், மிடுக்கான வார்த்தைகள் கொண்டும் தேட வேண்டாம். ஏனெனில், சுயம் என்னும் கடலிற்கு கரைகளும் இல்லை, அளவும் இல்லை...

நான் உண்மையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட நான் ஒரு உண்மையை கண்டேன் என்று சொல்வது நல்லது. நான் ஆத்மாவின் பாதையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட ஆத்மாவை என் பாதையில் கண்டேன் என்று சொல்லலாம்.ஏனென்றால் ஆத்மா எல்லா பாதைகளின் மீதும் பயணிக்கிறது.

அது நடக்கும் பாதை ஒரு நேர்க் கோடு இல்லை அது ஒரு நாணலைப் போல வளர்வதும் இல்லை.. ஆத்மாவின் விரிதலானது, எண்ணில்லா இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மொட்டின் அவிழ்தல் போன்றது.

கேள்வி
உங்கள் சுய அறிவு என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்? 

Wednesday, April 8, 2015

Keep Looking and You'll See - Bo Lozoff

கவனித்தால் தென்படும்
- போ லோசோஃப்

Original Reading

உலகின் எல்லா ஞான பாரம்பரியங்களிலும் வாழ்வில் மூன்று விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுரை உள்ளது.
1) பொருள் மீது ஆசை கொள்ளாமல் எளிமையாக வாழ்தல்.
2) நம் வாழ்வை, நாம் விரும்பும், மற்றும் முக்கியமாக கருதும் ஒரு காரியத்திற்குஅர்ப்பணித்தல். 
3) தினமும் நம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்காக ஒரு சில நிமிடங்கள்ளாவது ஒதுக்குதல்..

வாழ்வின் அர்த்தத்தை நாம் வெளியே தேடினால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நம்மை நாமெ நிலைப் படுதிக் கொண்டு அதைத் தேடினால், அந்த அர்த்தம் நமக்காக இந்த தருணத்தில் காத்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்வோம்.(...)

தினமும் நாம் தியானத்தில் அமர்ந்து, உண்மையாக நம் உடலும் மனமும் உணர்வதைப் சாட்சியாக பார்த்தோமானால், சிறிய பெரிய சலனங்கள் மேலெழுகின்றதை உணரலாம். முதலில் இவை நம்மை தொந்தரவு செய்வது போல இருந்தாலும், நாம் கவனித்துக் கொண்டே இருந்தால், தெளிவு பிறக்கத் தொடங்குகிறது. (...)

நம்மை நாமே ஒரு சிறிய விதத்தில் கூட ஏமாற்றிக் கொண்டோம் என்றால், நம் ஆன்மீகப் பயிற்சி அதைக் காட்டிக் கொடுக்கும். அது என்ன தவறு என்பதை நாம் கவனமாக தேடினால், அது தென்படும். அதன் பிறகு நம் தவறை நாம் திருத்திக் கொள்ள முயற்சி செய்தால், நம்மை பற்றியும், இந்த உலகைப் பற்றியும், நாம் சிறிது புரிந்து கொண்டு இருப்போம்.

கேள்வி
உங்கள் வாழ்வில் நீங்கள் முக்கியமாக கருதும் ஒரு காரியம் என்ன? 

Thursday, March 26, 2015

Experiential Wisdom by S. N. Goenka

அனுபவத்தால் வரும் மெய்யறிவு
- S.N. கோயங்கா

Oringial Reading:
http://www.awakin.org/read/view.php?tid=55

மெய்யறிவு என்பதற்கு, சரியாக அறிவது என்று பொருள். மேலோட்டமான உண்மையை அறிவது மெய்யறிவு ஆகாது. ஒரு குழந்தை, ஒரு வைரத்தைப் பார்த்தால், அது அழகான பளபளக்கும் கல் என்று புரிந்து கொள்ளும். அதையே ஒரு நல்ல ஆசாரி பார்த்தால், அதன் குறை நிறைகளை ஆழமாக அறிந்து, அதன் விலையை சரியாக கணிப்பார். இதைப் போல், எந்த ஒரு சூழ்நிலையையும், ஆழத்துடன் நோக்கி, அடியில் படிந்து இருக்கும் முழுமையான உண்மையை, சரியாக புரிந்து கொள்ளும் திறனே மெய்யறிவு.

இந்த அறிவை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கேள்வி ஞானத்தாலோ, பிறர் கருத்துக்களைப் படிப்பதாலோ வருவது. இரண்டாவது, நம் கருத்துக்களைக் கொண்டு, அலசி ஆராயும் பகுத்தறிவால் வருவது. இவை இரண்டும், வாழ்க்கையில் உபயோகமாக இருந்தாலும், பிறர் வழியே நம்மை அடைந்த காரணத்தால், இவற்றால் நீண்ட காலப் பயன் நமக்கு கிடைப்பது இல்லை.
      
மூன்றாவது வகையானது, நம் சொந்த அனுபவத்தால் நமக்குள் மலரும் மெய்யறிவு. இந்தப் பயனுள்ள அறிவாற்றலை மேம்படுத்த, நாம் அறநெறிகளைப் பின்பற்றுவதும், விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அவசியம். இந்த  மேம்பட்ட நிலையில் நிற்கும் மனதால் மட்டுமே, உண்மையை, உள்ளது போல், புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், முடியும்.

கரு / கேள்வி:
உங்கள் அனுபவத்தில் மலர்ந்த ஒரு மெய்யறிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, March 20, 2015

Unproduced Stillness by Adyashanti

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=343
  
தயாரிக்காத மௌனம்
- ஆத்யஷாந்தி


மௌனம், அமைதி, விழிப்புணர்வு போன்றவற்றை நாம் உருவாக்க முடியாது. அவை நாம் தயாரிக்க கூடிய நிலைகள் இல்லை. பெயரும், உருவமும் அற்ற மௌனம் என்னும் சாட்சியில்தான் எல்லா நிலைகளும் எழுவதும், பின்பு விழுவதும் நடக்கிறது. நாம் இந்த சாட்சியாக, அமைதியில் இருக்கும்பொழுது மற்ற எல்லாம் அதனதன் இயற்கையில் இயங்குகின்றன. மனதின் கட்டாயப் பிடியில் இருந்து நம் விழிப்புணர்வு விடுபடுகிறது.

எண்ணங்களின் ஓயாத அசைவுகளால் தொட முடியாத ஒன்றை நம் அனுபவத்தின் மூலம் கண்டுபிடிப்பது நம் ஆன்மீக பயிற்சியின் நோக்கமாகும். இதற்காக நம் எண்ணங்களை அடக்கத் தேவை இல்லை, மூளையை மட்டும் பயன்படுத்தி எல்லவற்றையும் புரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை. நம்முள் எப்பொழுதும் இருக்கும், நாம் அறியாத, அசையாத மூலத்தை அறியும் முயற்சியில் நாம் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் நம் எண்ணங்கள் உண்மையை பிரதிபலிக்கத் தொடங்கும். இல்லாவிடில் கருத்துக்களால் மட்டும் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மட்டுமே நம்மால் காண முடியும்.

நான் பேசுவது எண்ணம், கருத்து, நம்பிக்கை - இவற்றின் வழியே மட்டும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், நிர்பந்தம் இல்லாத மனதின் ஒரு நிலையப் பற்றி;  நம்முடைய பாதுகாப்புக்காக மனதையோ, உணர்வுகளையோ, உணர்ச்சிகளையோ மேற்கோள் காட்டாமல், எல்லா  பிரிவுகளையும் நாம் மறந்து, மனம்  விடுதலை அடையும் நிலையைப் பற்றி.

Friday, March 13, 2015

It All Goes Wrong Anyway by Ajahn Brahm

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=1062

தவறுகள் நடக்கத்தான் செய்யும்
- ஆஜான் ப்ரஹ்ம


நாம் வாழுமிடம் ஆஸ்ரமமாக இருக்கலாம், ஒரு நகரமாக இருக்கலாம்
அல்லது ஒரு அமைதியான மரங்கள் சூழ்ந்த தெருவாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் அவ்வப்ப்போது
வருவது என்பது இயற்கையே. சில முறை பழுதாவதுதான் நம் வீட்டில்
இயங்கும் பொருட்களின் இயற்கை,. வாழ்க்கை தங்கு தடங்கலின்றி
செல்ல வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்
அப்படி நடப்பது அரிது.


துக்கம் என்ற வார்த்தையின் ஒரு ஆழமான அர்த்தம்,.உலகம் நமக்கு
கொடுக்க முடியாத ஒன்றை அதனிடம் கேட்பது. மிகச் சரியான ஒரு
வீடும், வேலையும் வேண்டும் என்று கேட்கிறோம். இப்பொழுதே ஆழ்ந்த
தியானமும், ஞானமும் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் இந்த
பிரபஞ்சத்தினால் இவற்றைத் தர இயலாது. தர முடியாத ஒன்றைக்
கேட்கிறோம்.என்றால் துக்கத்தைக் கேட்கிறோம்.என்றுதான் பொருள்.


பணி செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், அவ்வப்போது சில
தவறுகள் நேரிடும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய
வேலை, இந்த உலகத்தை நம் ஆசைக்கேற்ப மாற்றுவதல்ல. நம்முடைய
பணி, கவனித்து, புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, விட்டு விடுதல் ஆகும்.

உடல், மனம், குடும்பம் மற்றும் உலகத்துடன் நாம் சண்டை போட போட,
நம்மால் உண்டாகும் காயங்களும், நமக்கு உண்டாகும் வலியும்,
அதிகமாகும்.


சில சமயங்களில் நம்மால் தினசரி வாழ்வில் இருந்து சற்றே தள்ளி
நின்று மொத்தமாக வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது. அவ்வப்போது
தவறுகள் நடப்பது இயற்கையே என்று புரிந்து கொள்ள முடிகிறது. நாம்
உழைக்கிறோம், கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறோம், நம் வீடு, மனம்,

உடல் மற்றும். வாழ்க்கையை, மிக சரியானதாக அமைப்பதற்கு பாடு
படுகிறோம்,  ஆனாலும், எல்லாவற்றிலும், கொஞ்சம் தவறுகள் நடக்கத்தான்
செய்யும்.

Friday, March 6, 2015

We Move in Infinite Space by Rainer Maria Rilke

Original reading: 
http://www.awakin.org/read/view.php?tid=957

முடிவில்லா வெளீயில் பயணம்
- ரெய்னெர் மரியா ரில்க


சோகம் வந்தடையும் தருணங்கள் எல்லாம் பதற்றம் மிக்க, உணர்வுகளை இழந்த தருணங்களாக நமக்கு தோன்றுகின்றன, அறிமுகமில்லாத ஒரு புதிய நிலையுடன் நாம் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை; நமக்கு தெரிந்த எல்லாம் ஒரு கணம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு விட்ட ஒரு நிலை. இருந்தாலும், ஒரு மாற்றத்தின் நடுவே நம்மால் நின்று கொண்டே இருக்க முடியாது. அதனால்தான் சோகம் என்பது கடந்து போகிறது.  புதிய நிலை நமக்குள் ஐக்கியம்மகி நம் ரத்தத்தோடு கலந்து போகிறது.

இதனால் ஒரு விருந்தாளியின் வருகையால் ஒரு வீடு எப்படி மாறுகிறதோ அப்படி நாம் மாறிப் போகிறோம். வந்தவர் யார் என்று யோசிக்கிறோம். அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், நம்முடைய எதிர் காலம்தான், அது நிகழ்வதற்கு வெகு முன்பே, நமக்குள் புகுந்து, உருமாறி, அமர்ந்து இருக்க்கிறது என்று சொல்லலாம்.  இதனால் சோகமாக இருக்கும்போது மிக கவனத்துடன் இருப்பது நல்லது.

எந்த அளவுக்கு சோக நிலையில் நாம் அமைதியுடன், பொறுமையுடன், திறந்த மனதுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு, ஆழமான, தெய்வீகமான ஒரு நிலை நமக்குள் நுழைய முடியும். எந்த அளவுக்கு அதை நாம் வரவேற்று நமதாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு அது நமது விதியாக மாறுகிறது. பின்னர் அது நிகழ்காலமாகி நடக்கும்போது, அதை நம் உள்ளூயிரால் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நாம் மன வளர்ச்சி அடையும் போது நமக்கு நிகழ்வது எல்லாம் நமக்குள் வெகு காலமாக இருந்தவையே; வெளியில் இருந்து வருவன இல்லை என்பது தெளிவாகிறது. தீதும் நன்றும் பிறர் தந்து வருவது இல்லை. விதி என்பது நம்முள் இருந்தே வெளிப்படுகிறது என்பது புரிகிறது.

பெரும்பாலான மக்கள், எதிர்காலம் தன்னுள் நுழையும்போது அதை கவனித்து ஐக்கியம் செய்வதில்லை, அதனால் அது நிகழ்காலமாக மாறி நடக்கும்போது, அதை அடையாளம் கண்டு கொள்ளவதும் இல்லை. தாம் கவனித்த அந்தத் தருணம் வரை, அது எங்கு இருந்தது என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறார்கள்.

பூமியை சுற்றிதான் சூரியன் வருகிறது என்று பண்டைய மக்கள் தவறாக நினைத்தது போல நாமும், காலத்தின் வருகைப் பற்றி தவறாக நினைக்கிறோம். காலம் நின்று கொண்டு இருக்கிறது. நாம்தான் முடிவில்லா வெளியில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

Thursday, February 26, 2015

Serving is Different From Helping and Fixing by Rachel Naomi Remen


Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=940 

 
சேவை, உதவி, சரி செய்தல் - வித்தியாசங்கள்.
- ரேச்சல் நவோமி ரேமென்  


சமீப காலத்தில் என்னால் எப்படி உதவ முடியும் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்து உள்ளது. அதையே சற்று ஆழமாக என்னால் எப்படி சேவை செய்ய முடியும் என்று கேட்கலாம்.

சேவை என்பது உதவியிலிருந்து வித்தியாசப் படுகிறது. உதவி என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு அல்ல. நான் ஒருவருக்கு உதவும் போது அவர் என்னை விட பலவீனமாக இருப்பதாக என் மனதில் எண்ணம் தோன்றுகிறது. நான் இவ்வாறு நினைப்பதை அவராலும் உணர முடியும். இதனால் அவருடைய தன்மானம், சுய மரியாதை, பூரணத்துவம் ஆகியவற்றில் குறைப்பாடு ஏற்படுகிறது. ஆக, அவருக்கு நான் கொடுப்பதை விட, அவரிடம் இருந்து நிறைய எடுக்கப் படுகிறது.

ஆனால், நாம் சேவை செய்யும்போது, நம் பலத்தை மட்டும் கொண்டு செய்வதில்லை. நம் அனுபவங்கள், பலவீனங்கள், வரம்புகள், காயங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான நிலையில் இருந்து செய்கிறோம். நம்மில் இருக்கும் பூரணத்துவத்தைக் கொண்டு வாழ்வின் பூரணத்துவத்திற்கு சேவை செய்கிறோம். சேவை என்பது சரி சமமான நிலையில் உள்ள இருவருக்கு இடையிலான உறவு.

உதவி என்பதன் கூடவே, கடன் என்பதும் வந்து விடுகிறது. ஆனால் சேவை என்பது ஒரு பரஸ்பர பரிமாற்றம். இதில் கடன்படுவது என்பது இல்லை. நாம் எந்த அளவுக்கு சேவை செய்கிறேனோ, அந்த அளவுக்கு நமக்கும் திருப்தியும், நன்றி உணர்வும் நிலைக்கின்றது.

சேவை என்பது ‘சரி செய்தல்’ என்பதில் இருந்தும் வித்தியாசப் படுகிறது. ஒருவரை உடைந்து போனவராக பார்க்கும் பொழுதுதான் அவரை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இந்த சமயத்தில் இன்னொருவரின் பூரணத்துவத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.

நமக்கும், நாம் சரி செய்ய முயலும் நபர் அல்லது சூழ்நிலைக்கும் ஒரு இடைவெளி உருவாகிறது. சரி செய்வது என்பது ஒரு மதிப்பெண் போடும் செயல் ஆகும். இந்த செயல், தன் இடைவெளியால், இருவருக்கிடையே உள்ள தொடர்பை குறைத்து, நாம் வேறு, அவர் வேறு என்ற அனுபவத்தை உருவாக்குகிறது.

சேவை என்பது, தூரத்தில் இருந்து செய்ய முடியாதது. யார் யாரிடம் நாம் ஒருமையை உணர்கிறோமோ, எதைத் தொட நம் மனம் அஞ்சுவதில்லையோ, அவருக்கும், அதற்கும் தான், நாம் சேவை செய்ய முடியும். வாழ்க்கை புனிதமானது என்பதால் நாம் அதற்கு சேவை செய்கிறோம்..அது உடைந்து இருக்கிறது என்பதால் அல்ல.

Ancient Law of Hospitality by Thomas Berry


Original Reading:http://www.awakin.org/read/view.php?tid=729

விருந்தோம்பலின் தர்மம்
- தாமஸ் பெர்ரி


நம்மிடம்  உள்ளதைப்  பகிர்ந்து  கொள்ளும்போது நம் வளம் கூடுகிறது என்ற விழிப்புணர்வு நமக்கு மன அமைதியைத் தரக் கூடும். 

இந்த பிரபஞ்சமும், பூமியும், வர்ணிக்க முடியாத வேற்றுமைகளின் சங்கமத்தை, தங்கள் ஒற்றுமையால் அரவணைத்து இருப்பதை நாம் இவற்றின் அமைப்பிலும் செயல்பாட்டிலும் நாம் உணரலாம்.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோரோ எனும் இயற்கை ஆர்வலரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. தோரோ மிக மிக எளிய வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு அழகான புல்வெளியும், மரங்களும் கலந்த ஒரு நிலத்தின் மீது ஈர்க்கப் பட்டு அதை வாங்க நினைத்தார். முன் பணத்த்தையும் செலுத்தினார். இந்த நிலத்தின் அழகையும் அற்புதத்தையும் தினம் அதனை காணும்போதே ரசிக்க முடிகிற போது எதற்காக நான் அதை என் பெயரில் வாங்க வேண்டும் என்ற உணர்தல் அவருக்கு வந்தது. நிலம் ஒருவர் பெயரில் இருந்தாலும், அதை ரசிப்பதன் மூலம், பலரும் அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.

பழங்கால சீனாவில் வாழ்ந்த மெனிகஸ் என்ற எழுத்தாளர் சீனப் பேரரசரை தன் மாளிகைத் தோட்டத்தில் சாமானிய மக்களையும் அனுமதிக்க வைத்தார். இவ்வாறு செய்வதால் அரசரின் சந்தோஷம் கூடும் என்பதைப் புரிய வைத்ததார்.

இந்தியாவில், பல நூறாண்டுகளாக, அனைத்து உயிர்களும் கரை தாண்டும் வரை தங்கள் தேவைகளைப் பொருட்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை  எடுக்கும் போதிசத்வர்களின் சரித்திரம் உண்டு.

இன்று நாம் ஒருவருடன் ஒருவர் மிக எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையை அடைந்து இருக்கிறோம். இதனால், நாம் தொலை தூரத்தில் வாழ்பவர்களைக் கூட சந்திக்க முடியும். சேர்ந்து, அமர்ந்து, கதைகள் பல பரிமாறி, உணவுடன் அருந்த முடியும். காலம் காலமாக, அதிதிகளை திறந்த மனதுடன் வரவேற்கும் விருந்தோம்பலின் தர்மம், இன்றைய் உலகிலும் நம்மை அழைக்கிறது.

Tree of Life by Eknath Easwran

Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=132 

வாழ்க்கை மரம் போன்றது
- ஏக்நாத் ஈஸ்வரன்

“மரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவன், காட்டைக் கோட்டை விட்டான்” என்ற பழமொழியை நாம் கேட்டு இருக்கலாம். அதே போல் நம்மில் பலர், இலைகளைப் மட்டும் பார்த்துக் கொண்டு, மரத்தைக் காண்பதில்லை, என்றும் கூட சொல்லலாம். பல்லாயிரம் . இலைகளின் கூட்டத்தில் ஆழ்ந்து போவதால்,, மரம் என்று ஒன்று இருப்பதையே நாம் மறக்கிறோம். 

மரம் இல்லாமல் இலை இல்லை என்பது நமக்கு புரிவதில்லை. மரத்தின் உயிர் திரவம்தான் இலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் நவீன வாழ்வில் இலை போன்ற தனித்துவத்திற்கே முதலிடம் கொடுக்கப் படுகிறது. “உன்னுடைய சந்தோஷத்தையும், பூரணத்துவத்தையும், உனக்கே உரித்தான, தனி வழியில் தேடு” என்ற செய்தி, தினம் நம்மை பல வகைகளில் வந்து அடைகிறது. நாம் தனித்துவத்தில் திருப்தியை நாடி, ஓடுவதற்கு காரணம், மரமே இல்லாமல் இலை மட்டும் செழிக்க முடியும் என்ற தவறான புரிதலே,

Committee of the Mind by Thannisaro Bhikku

Original Reading:
http://www.awakin.org/read/view.php?tid=953

மனதின் குழு
- தன்னிசாரோ பிக்கு

உங்கள் மனதில் நீங்கள் யார் என்பதைப் பற்றிய பல அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு  அடையாளமும் ஒரு தனி 'நீங்கள்' என்று கருதலாம். இந்த அடையாளங்கள் எல்லாம், மனம் என்னும் குழுவின் உறுப்பினர்கள்.

இதனால்தான், நம் மனம் என்பது ஒரு-மனமாக இல்லாமல், பல குரல்களும், விருப்பங்களும் கொண்ட ஒரு கூட்டம் போலத் தோன்றுகிறது.. இந்த மனக்குழுவின் சில உறுப்பினர்கள், தங்கள் ஆசைகளுக்கு ஆதாரங்கள் என்ன என்பதைப் நேர்மையுடன் தெரிவிக்கிரார்கள். குழுவின் மற்ற நபர்கள், அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கிரார்கள்.

இந்த உள் வேலைகளை வெளிப்படையாக்கி, குழுவை கொஞ்சம் சீரமைப்பது நாம் தியானம் செய்வதன் ஒரு நோக்கம். இதனால் நம் உண்மையான சந்தோஷத்தை விரும்பும் பல எண்ணங்கள், ஒன்றோடு ஒன்று நல்லிணக்கத்துடன் சேர்ந்து செயல் பட இயலும்.

இந்த எண்ணங்ளையும் விருப்பங்களையும் கூட, நாம் ஒரு குழுவாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால், தியானத்தைப் பயிற்சியாக செய்வது நம்முடைய சில விருப்பங்களுக்கு எதிராகத் தோன்றினாலும், எல்லா  விருப்பங்களுக்கும் அது எதிரானது அல்ல என்பது நமக்குத் தெளிவாகும். சில இணக்கம் இல்லாத விருப்பங்கள் வெளியேறும் போது, நம்மால் அதைப் பெரிது படுத்தாமல் இருக்க முடியும். இந்தக் குழுவின் நல்லெணங்களைக் கொண்டு மற்ற எண்ணங்களுக்கு நாம் பயிற்சியும் கொடுக்க முடியும். இப்படி செய்வதால் உண்மையான சந்தோஷம் என்ன என்பதை நம் மனதால் உணர முடியும்.

மனக்குழுவின் பல உறுப்பினர்கள் தற்காலிக சந்தோஷத்தைத் தேடித் தேடி அலைவதால், மனதின் பல பரிணாமங்கள், தங்கள் இயல்பு நிலையில் இருந்து, மாறு பட்டு இருக்கின்றன. இதில் ஒரு பரிணாமம், இடங்களாலும், காலங்களாலும், பாதிக்கப் படாதது.. நிபந்தனை அற்றது.. இது மொத்த சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவம் செய்யும் பரிணாமம். குழுவின் சரியான உறுப்பினர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம் நாம் இந்த பரிணாமத்தை அடைய முடியும்.

இந்தப் பரிணாமத்தைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது உப்பு நீரில் உள்ள நல்ல நீர் போன்றது. நம் சாதாரண மனது உப்பு நீர் போன்றது - குடித்தால் உடல் நிலை சரி இல்லாமல் போகும். இந்த நீரை அப்படியே விட்டு வைத்தால், நல்ல நீர் தன்னாலே பிரிந்து தனியாக வராது. இதைப் பிரித்து எடுக்க, நாம் முயற்சி செய்தால் மட்டுமே முடியும். ஆனால், நம் முயற்சியால் நல்ல நீர் என்பது புதிதாக இங்கே உருவாகவில்லை. ஏற்கனவே நம் உள்ளிருக்கும் நல்ல நீர்தான், பிரிந்து வந்து நம் தாகத்தைத் தீர்க்கிறது.